“மதராஸி” படத்தின் வில்லன் ரோலுக்கு ஒப்புக்கொண்ட “துப்பாக்கி” பட நடிகர் - ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ‘மதராஸி’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோவை கூலி படத்தின் இடைவெளியின் போது வெளியிடப்பட்டு வருகிறது. ‘மதராஸி’ படத்தின் இசைவெளியிட்டு விழா வருகிற 24ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில், இசைவெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பேட்டிகளை அளிக்க தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதில் ‘மதராஸி’ படத்தின் கதைக்களம் உள்ளிட்ட சில சுவராசியங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஏ.ஆர்.முருகதாஸ், “‘மதராஸி’ படத்தின் களம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்ஷன் கதையாகும். ‘கஜினி’ போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்டுக்கான ப்ரோமோ எனது திட்டம் இல்லை. அது முழுக்கவே சிவகார்த்திகேயன் – அனிருத் இருவரும் சேர்ந்து உருவாக்கியது தான். இந்தியில் பல்வேறு முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாக நடிக்க கேட்டபோது கூட மறுத்துவிட்டார் வித்யூத் ஜாம்வால். ஆனால், நான் ‘மதராஸி’ படத்துக்காக அணுகியபோது, கதை என்னவென்றாலும் நடிக்கிறேன் என்று கூறினார். அவருடைய கதாபாத்திரம் மட்டுமன்றி பிஜு மேனன் மற்றும் ஷபீர் ஆகியோரது கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மணி வசந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘மதராஸி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி (2012) படத்தில் வில்லனாக நடித்து கலக்கி இருந்த வித்யுத், கடைசியாக சூர்யாவுடன் ''அஞ்சான்'' (2014) படத்தில் நடித்திருந்தார்.தற்போது அவர் ‘மதராஸி’ படத்தின் மூலம் முருகதாஸுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.