எலக்ட்ரிக் கார் மோதி தொழிலாளி சாவு

மோகனூர் அருகே எலக்ட்ரிக் கார் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2023-10-03 18:50 GMT

மோகனூர்

தொழிலாளி

நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (34). இவர்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளன. சரவணன் கடந்த மாதம் 27-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வளையப்பட்டி சென்று விட்டு, நாமக்கல் திருச்சி மெயின் ரோட்டில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது நாமக்கல்லில் இருந்து வளையப்பட்டி நோக்கி வந்த ஒரு எலக்ட்ரிக் கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று சரவணன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சரண்யா மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தை ஏற்படுத்தியவரை தேடி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு சரவணனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்