அற்புத பலன்களை தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

ஆடிவெள்ளியன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, வாடிய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடையும் என்பது நம்பிக்கை.;

Update:2025-07-17 13:04 IST

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகை வழிபாடு 'செய்தால் வெற்றிகள் வந்து குவியும். வேதனைகள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப்படையில் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளி, தை வெள்ளி தினங்களில் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன்கள் கைமேல் கிடைக்கும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. குறிப்பாக, ஆடிவெள்ளியன்று இல்லத்து பூஜையறையில் விளக்கேற்றி வைத்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, வாடிய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடையும் என்பது நம்பிக்கை. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் தான் ஆலயங்களில் விளக்கு பூஜை நடத்துவார்கள். ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்யும் மாதம் ஆடி மாதமாகும்.

வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமிக்கு உரிய கோலங்களான தாமரைக் கோலம், இதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம் போன்றவற்றை வரைந்து திருமகளை வரவேற்க வேண்டும். 'திருமகளே வருக' என்று கோல மாவில் எழுதி வைக்கலாம். அதிகாலையில் கதவைத் திறக்கும்பொழுது அஷ்டலட்சுமிகளின் பெயரையும் உச்சரித்து 'வருக வருக' என்று சொல்ல வேண்டும். இல்லத்து பூஜையறையில் மகாலட்சுமி படம் வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி வைத்து நடுநாயகமாக விநாயகர் படம் வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது.

"அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம், உந்தனருள் பெற்றுவிட்டால் ஒடுவதும் உண்மையன்றோ, இன்றோடு துயர் விலக இனிய தனலட்சுமியே மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இது சமயம்" என்று தனலட்சுமிக்குரிய சமய மாலைப் பாடல்களையும்பாடி வழிபடலாம். லட்சுமிக்கு ஆடி வெள்ளியன்று சமய மாலை பாடி வழிபட்டால் இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் வந்து கைகொடுப்பாள் என்பது முன்னோர்கள் வாக்கு.

அம்பிகையை 'சக்தி' என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தை செய்தாலும் 'சக்தி இருந்தால் செய்.. இல்லையேல் சிவனே என்றிரு' என்று சான்றோர்கள் சொல்வது வழக்கம். எனவே ஒரு மனிதன் செயல்பட காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள் கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தியை சாந்த வடிவில் 'காமாட்சி' என்றும், 'மீனாட்சி' என்றும், 'விசாலாட்சி' என்றும், 'உண்ணாமலை' என்றும், 'அகிலாண்டேஸ்வரி' என்றும், 'புவனேஸ்வரி' என்றும், 'திரிபுரசுந்திரி, காந்திமதி, பெரியநாயகி, தையல்நாயகி' என்றும் எண்ணற்ற பெயர்களை சூட்டி அந்த இறைவியை வழிபாடு செய்கிறோம். திருக்கடையூரில் அமாவாசை அன்று நிலவை வரவழைத்து அபிராமிபட்டருக்கு அருள் வழங்கியவள் அம்பிகை.

ஒம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு மாரியம்மன், காளியம்மன், பொன்னழகி, கனக துர்க்கை, பராசக்தி, திரிசூலி என்றெல்லாம் பெயர் சூட்டி இருக்கிறார்கள். பால் கேட்டு அழுத பிள்ளைக்கு சீர்காழி படித்துறையில் பால் கொடுத்தவள், பச்சை வெற்றிலையால் நாக்கில் 'ஓம்' என்று எழுதி காளமேகத்தை பாட்டரசன் ஆக்கியவள் அம்பிகை. முருகப்பெருமானுக்கு சக்தி வேல் கொடுத்துச் சூரனை சம்காரம் செய்ய வைத்தவள் அம்பிகை. அப்படிப்பட்ட அம்பிகையை வழிபடுவதற்கு ஏற்ற நாள் ஆடி வெள்ளியாகும். குடும்பப் பிரச்சினை அகலவும், திருமண யோகம் கைகூடவும், அனைத்து நன்மைகளும் அடுக்கடுக்காக வந்து சேரவும் ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபடுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்