திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;
திருவண்ணாமலை,
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு இன்று மாலை விநாயகர் உற்சவ உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை காலை சுமார் 6.30 மணியில் இருந்து 8 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி அம்மனுக்கான விழா என்பதால் உண்ணாமலை அம்மன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது.
கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட பிரம்மோற்சவம் விழாக்களுக்கான கொடியேற்றம் சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் ஏற்றப்படும். தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெற உள்ளது. இந்த விழா வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது.
28-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.