சோழவந்தான்: இளங்காளியம்மன் கோவில் திருவிழா- முளைப்பாரி ஊர்வலம்
முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள் கோவில் முன்பு முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர்.;
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு தரப்பினர் சார்பாக மண்டகப்படிகள், அன்னதானம், நிலைமாலை செலுத்துதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. சுமார் 500 பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடி அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்தனர்.