சிவபெருமானின் அருளால் மகா விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம்

ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், ‘திருசங்கை மங்கை’ என்று அழைக்கப்படுகிறது.;

Update:2025-09-07 14:18 IST

மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, ‘சங்கு சக்கரதாரி’ என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, முறையாக சிவ பூஜை செய்து சங்கு சக்கரம் இரண்டையும் ஈசனிடமிருந்து பெற்றார் என்கிறது புராண வரலாறு.

சங்கு பெற்ற கதை

அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், ‘பாஞ்ச ஜன்யம்’ எனப்பெயர் பெற்றது.

ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், ‘திருசங்கை மங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேஸ்வரர் ஆகிய பெயர்கள் உள்ளன.

சக்கரம் பெற்ற கதை

சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். சிவபெருமானை வழிபட்டு, யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்றான். இதனால் ஆணவம் கொண்டு, தேவர்கள் மற்றும் பிற தெய்வங்களை துன்புறுத்தினான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார்.

இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. அந்தளவுக்கு அவனது தவ பலம் இருந்தது. எனவே, அவனுக்கு வரமருளிய பரம்பொருள் சிவனால்தான் அவனைக் கொல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அதற்கேற்ப, அவனும் ஒருமுறை கயிலாயம் சென்றான். அங்கே சிவபெருமான் ஒரு முதியவர் வேடத்தில் இருந்தார். அவரிடம் சலந்தரன், “சிவன் எங்கே இருக்கிறார்? அவருடன் யுத்தம் செய்து, கயிலாயத்தைக் கைப்பற்ற வந்திருக்கிறேன்” என்றான். சிவன் அவனிடம், “நல்லது மகனே! சிவனை வெல்ல வேண்டும் என்கிறாயே? உன் பலத்தை சோதிக்க நான் வைக்கும் தேர்வில் ஜெயிப்பாயா? அப்படி ஜெயித்தால் உனக்கு வெற்றி உறுதி” என்றார்.“தாராளமாக! தேர்வைத் துவக்கலாம்” என்றான் சலந்தரன்.

சிவன் தன் கால் விரலால், தரையில் ஒரு வட்டம் போட்டு, “இந்த வட்டத்தைத் தூக்கு பார்க்கலாம்” என்றார். சலந்தரன் கலங்கவில்லை. ‘இதென்ன பிரமாதம்’ என்றவன், வட்டம் போட்டிருந்த இடத்தில் பூமியையே அகழ்ந்தெடுத்து, தன் தலையில் வைத்துக் கொண்டான். அப்போது அந்த வட்டச்சக்கரம் வேகமாக சுழல ஆரம்பித்து, அவனை இரு துண்டுகளாகக் கிழித்து விட்டது. சலந்தரன் இறந்து போனான்.

இந்தச் சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்த திருமால், சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார். ‘பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால் சக்கரம் கிடைக்கும்’ என்றும் சிவன் கூறினார். அதன்படி தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள் பூஜையில் ஒரு தாமரைப் பூ குறைந்தது. உடனே திருமால் சற்றும் யோசிக்காமல் தனது கண்ணையே மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் சமர்ப்பித்தார். திருமாலின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தை திருமாலுக்கு வரமாக அருளிச்செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்