ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று பூச்சாண்டி சேவை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.;
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதங்களில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று தொடங்கியது.
முதல் நாளான நேற்று காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
யாகசாலையில் நம்பெருமாள் எழுந்தருளியிருக்க அவரைச்சுற்றிலும் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் இந்தநிகழ்ச்சி பூ பரத்திய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிழைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். எனவே இதற்கு நூலிழைத் திருவிழா என்ற சிறப்பு பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ர உற்சவவம் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
பவித்ர உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகே உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
இந்நிலையில் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை இன்று (வியாழக்கிழமை) மதியம் நடக்கிறது. மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த பூச்சாண்டி சேவையை பக்தர்கள் தரிசிக்கலாம். பூச்சாண்டி சேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் நூலிழைகளை சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி பார்வைக்கு அச்சமூட்டுவது போல் இருக்கும். எனவே இதை பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.
பவித்ர உற்சவத்தின் 7-ம் நாளான வரும் 9-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். உற்சவத்தின் 9-ம் நாளான 11-ந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரியபெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது. பவித்ர உற்சவம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.