திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
நேற்று நடந்த யாகசாலை பூஜையில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி, பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த யாகசாலை பூஜைகள் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று காலையில் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதில் தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பூர்ணாகுதி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து யாகசாலை முன் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 'திருச்செந்தூர் சுப்பிரமணிய கடவுள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடந்தது. யாகசாலை முன் 12 பெண்கள் உள்பட 108 ஓதுவார் மூர்த்திகளால் தமிழ் வேதங்கள் ஓதப்பட்டன. பின்னர் மூலவர் விமானத்தில் வரகு நிரப்பிய கலசம் பொருத்தப்பட்டது. இன்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றன.
நேற்று காலை நடந்த யாகசாலை பூஜையில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, கோவில் தக்கார் அருள்முருகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், சண்முகையா எம்.எல்.ஏ., கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் சுகுமாறன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.