காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்
கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய வரதராஜப் பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி பார்வேட்டை கண்டருளினார்.;
தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாள்
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவாக விஜயதசமியன்று வன்னிமர பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது.
வன்னிமர பார்வேட்டை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளை பட்டு உடுத்தி மலர் மாலைகள், திருவாபரணங்கள், வாள். கேடயம் அணிவித்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், மேள தாள வாத்தியங்கள் முழங்க, வேத பாராயண கோஷ்டினர் பாடி வர, சன்னதி வீதி மற்றும் நான்கு மாட விதிகளில் உலா வந்து கோவிலுக்கு திரும்பினார்.
பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி வன்னி மர பார்வேட்டை கண்டருளினார்.
வன்னிமர பார்வேட்டை உற்சவத்திற்காக தங்க குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளுக்கு வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை காட்டி வணங்கி வழிபட்டனர்.