விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்.. பரமத்திவேலூர் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.;
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர் மற்றும் கோப்பணம்பாளையம் விநாயகர்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 23-ஆம் தேதி காலை மகா கணபதி யாகம், லட்சார்ச்சனை மற்றும் 108 விக்னேஷ்வர பூஜையும், 24- ஆம் தேதி பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாசக முற்றோதல் நடைபெற்றது.
25-ஆம் தேதி மகா கணபதி யாகம், 108 வலம்புரி சங்கு மற்றும் 1008 சங்காபிஷேகம், மகா ஆராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று பஞ்சமுக கணபதிக்கு பால்குடம், திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மகா கணபதி யாகம், அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தன பூஜை , சுமங்கலி பூஜை, மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறுகிறது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகப்பெருமானை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், வேலூர் பேட்டையில் உள்ள விநாயகர் , பொன்மலர் பாளையத்தில் ராஜா வாய்க்கால் பகுதியில் உள்ள தண்ணீர் விநாயகர், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், சோழசிராமணி, கபிலர்மலை மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.