கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் காலமானார்
மறைந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
கேரள முன்னாள் முதல்-மந்திரியும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அச்சுதானந்தன்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் அச்சுதானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதனையடுத்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்தனர். இதன் பின்னர் அச்சுதானந்தன் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1989 முதல் 2009 வரை மார்க்சிஸ்ட் கம்யூ.பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்-மந்திரியாக இருந்தவர். 5 ஆண்டு ஆட்சியில் கேரளாவுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர் அச்சுதானந்தன்.
திருவனந்தபுரத்தில் தமது வீட்டில் இருந்த போது கடந்த ஜூன் 23-ந் தேதி அச்சுதானந்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அச்சுதானந்தன் மறைவிற்கு கேரளாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த கேரள முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தனின் உடல், இன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள தர்பார் அரங்கில் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. நாளை காலை முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு அவரது சொந்த ஊரான ஆழப்புலாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. அரசு முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.