வேலையை காட்டும் ஏஐ: 8,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம்!
ஏஐ துறையின் அபரிமிதமான வளர்ச்சியின் தாக்கம் தற்போதே எதிரொலிக்க தொடங்கியுள்ளது.;
Photo credit: IBM Building in Bengaluru (photo/wikipedia)
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில் நுட்பத்தால் பல்வேறு வேலைகள் தானியங்கி முறையில் செய்யப்படுதால் பெரிய அளவில் மனித சக்தியின் வேலை குறையும் என்பது பல்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஏஐ துறையின் அபரிமிதமான வளர்ச்சியின் தாக்கம் தற்போதே எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் லே ஆப் எனப்படும் பணி நீக்கத்தை தொடங்கியுள்ளது. தற்போது இந்த வரிசையில் ஐபிஎம் நிறுவனமும் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு ஐ.பி.எம்., நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகின் முன்னணி நிறுவனமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு மென்பொருள் மற்றும் கணினி சார்ந்த நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், ஐ.பி.எம்., நிறுவனமும் இதனை மேற்கொண்டு இருக்கிறது. கலிபோர்னியா, டெக்சாஸ், டல்லாஸ், நியூயார்க் நகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றியோர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம், 200 பணியாளர்களை இந்த ஆண்டு துவக்கத்திலேயே நீக்கியிருந்தது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐ-களிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.