திருமணமான பெண்ணுடன் கணவர் உல்லாசம்... தட்டிக்கேட்ட மனைவி... அடுத்து நடந்த கொடூரம்
திருமணத்துக்கு பிறகு சிவானந்தாவும், ஜெயஸ்ரீயும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கோகுல்ரோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட நந்தகோகுல் படாவனே பகுதியில் வசித்து வருபவர் சிவானந்தா படிகார்(வயது 35). இவருக்கும், ஜெயஸ்ரீ(30) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 21-ந் தேதி திருமணம் நடந்தது. சிவானந்தா உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். திருமணத்துக்கு பிறகு சிவானந்தாவும், ஜெயஸ்ரீயும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிவானந்தாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கணவரின் கள்ளத்தொடர்பு விவரம்ஜெயஸ்ரீக்கு தெரியவந்தது. அவர் உடனே தனது கணவரை கண்டித்தார். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தார்.
ஆனால் சிவானந்தா கேட்கவில்லை. அவர் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையேயான தகராறு உச்சக்கட்டத்தை எட்டியது. அப்போது அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்தனர். சிறிது நேரத்தில் சிவானந்தா, ஜெயஸ்ரீயின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் உடனே விரைந்து வந்தனர். மேலும் இதுபற்றி கோகுல்ரோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அப்போது ஜெயஸ்ரீ, தூக்கில் பிணமாக தொங்கினார். இதற்கிடையே ஜெயஸ்ரீயின் பெற்றோரும் அங்கு வந்தனர். அவர்கள் தங்களது மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம், சிவானந்தாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருப்பதாகவும், அதை தட்டிக்கேட்ட மகளை அவர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருப்பதாகவும் புகார் கூறினர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் கூறினர். தற்போது இச்சம்பவம் குறித்து கோகுல்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவானந்தாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.