வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு அமித்ஷா தான் காரணம்; மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார்.;
கொல்கத்தா,
தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்களில் சிலர் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் பின்னணியில் அமித்ஷா உள்ளதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா கூறுகையில், தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெறும் பின்னணிக்கு அமித்ஷா தான் காரணம். எந்த விலை கொடுத்தாவது மேற்கு வங்காளத்தை கைப்பற்ற அமித்ஷா நினைக்கிறார். ஆனால், அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியை மேற்கொள்வதன் மூலம் மேற்கு வங்காளத்தில் பாஜக தன் சொந்த சவக்குழியை தோண்டிக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்காளமும், பீகாரும் ஒன்று அல்ல
என்றார்.