மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை
ஆப்பிரிக்க நாடான மாலியில் 2025 நவம்பர் 6ம் தேதி அன்று 5 இந்திய தொழிலாளிகளை, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.;
புதுடெல்லி,
ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (3.12.2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள் (பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா, தளபதி சுரேஷ்) மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 2025 நவம்பர் 6ம் தேதி அன்று, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.