அதிகாலையில் பரபரப்பு: ரூ.7 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.;

Update:2025-04-06 06:21 IST

கோப்புப்படம்

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரில் ரூ.7.5 லட்சம் பணத்துடன் கூடிய தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் (ஏ.டி.எம்.) திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இங்கு சிலர் பணம் எடுக்க வந்தபோது ஏ.டி.எம். எந்திரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கருப்பு பெயிண்ட் அடித்தனர். மேலும் நெட்வொர்க் கேபிள்களை துண்டித்தனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்திருந்த உபகரணங்கள் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை அகற்றி, அதை அலேக்காக தூக்கி சென்றது தெரியவந்தது.

அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.7.5 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை துக்கிச்சென்ற 3 கொள்ளையர்களை வலைவீசி தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்