டெல்லி: பூங்காவில் தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி
டெல்லியில் பூங்காவில் உள்ள மரத்தில் காதல் ஜோடி தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
டெல்லியின் தெற்கு பகுதியான ஹவுஸ் ஹாஸ் என்ற இடத்தில் மான் பூங்கா ஒன்று உள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு ஒரு இளம் ஜோடி பூங்காவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்குவதாக, பூங்காவின் காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர். உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் தூக்கில் தொங்கிய வாலிபர் பீஸா கடை ஊழியர் என்றும், 21 வயதானவர் என்றும் தெரியவந்தது. அவர் கருப்பு டி-சர்ட், நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவருடன் இறந்த பெண் 18 வயதுடையவர். பச்சை சுடிதார் அணிந்திருந்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சோக முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உள்ளூர்வாசிகள் சிலர், இளம் ஜோடியின் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். அவர்கள் தூக்கில் தொங்கிய மரம் மிக உயரமானது. அதில் இருவரும் ஏறுவது சாத்தியமில்லாதது. அவர்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.