டெல்லி கார் வெடிப்பில் அடையாளம் காணப்படாத 3 உடல்கள்... டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 உடல் பாகங்கள் இன்னும் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் தற்கொலை குண்டாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
இவரோடு பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதி பற்றியும் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் டாக்டர்கள். இவர்கள் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தோடு தொடர்புடையவர்கள்.
இவர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு ரூ.20 லட்சம் நிதி உதவி செய்ததாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய விசாரணையில் அந்த பணத்தை பயங்கரவாதிகளே சுயமாக திரட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கார் வெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சிறு சிறு உடல் பாகங்கள் இதற்கு முன்பு அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இன்னும் 3 உடல் பாகங்கள் யாருடையது? என அடையாளம் காணப்படவில்லை.
ஒரு தாடை, ஒரு கால் மூட்டு, தலையும், கை, காலும் இல்லாத முண்டம் ஆகியவை இன்னும் லோக் நாயக் ஆஸ்பத்திரி பிணவறையிலேயே உள்ளன,.இவற்றை டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி, யாருடையது? என கண்டறிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது.