பள்ளி மாடியில் இருந்து குதித்து 6ம் வகுப்பு மாணவி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அமிரா (வயது 9) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், மாணவி அமிரா கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி பள்ளியின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, சிறுமி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பள்ளி நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.