பழமையான வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு - மத்திய அரசு
20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களின் பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தும் வரைவு ஒன்றை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது.
இந்த கட்டண உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இலகு ரக வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.3,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கு பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.20 ஆயிரமாகவும், இறக்குமதியான 4 சக்கரம் அல்லது அதற்கு மேல் சக்கரங்களை கொண்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூ.80 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை குறைக்கவே இந்த நடவடிக்கை என அரசு கூறியுள்ளது.