கனமழை எச்சரிக்கை எதிரொலி: இமாசலபிரதேசத்தில் 360 சாலைகள் மூடல்
இமாசல பிரதேசத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
சிம்லா,
இந்தியாவின் இமயமலையில் அமைந்துள்ள மாநிலம் இமாசலபிரதேசம். இங்குள்ள சிம்லா, மனாலி, தரம்சாலா, ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசிக்க அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. காங்கரா, முராரி தேவி பாலம்பூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையின் எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட, ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில்நாளை (திங்கட்கிழமை) முதல் 4 நாட்களுக்கு இமாசலபிரதேசத்தில் கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 360 சாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 214 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், குலு மாவட்டத்தில் 92 சாலைகளும் அடைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.