பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ

பஹல்காம் சம்பவம் நடந்து 8 மாதத்துக்கு பிறகு ஜம்மு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.;

Update:2025-12-15 19:34 IST

ஜம்மு,

காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர், பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர். அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், ஜம்மு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சம்பவம் நடந்து 8 மாதத்துக்கு பிறகு முழுமையான விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாகனம் நிறைய பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில் இந்த தாக்குதலில் ஈடுபட்டு பின்னர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜிப்ரான், சுலைமான், அப்கான் ஆகிய 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் மற்றும் இந்த பயங்கரவாத தாக்குதலில் சதித்திட்டம், பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர்வாசிகள் என 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றது. மேலும் பல்வேறு ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்