வருங்கால வைப்பு நிதி; தானியங்கி முறையில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு
பிஎப் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம்.;
image courtesy: PTI
புதுடெல்லி,
பிஎப் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்கும் போது இனி ஆட்டோ கிளைமில் (தானியங்கி) 5 லட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித சான்றிதழ்களும் தேவையில்லை. உடல் நலக்குறைவு, வீட்டுக்கடன், திருமணம் உள்ளிட்ட காரணங்களை பதிவிட்டு எடுத்துக்கொள்ள முடியும். விண்ணப்பித்த மூன்று நாட்களில் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். பிஎப் கணக்கில் பணம் வைத்து இருப்பவர்கள் விரைவாக நிதியை பெற உதவும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார்.
இதற்கு முன்பு வரை ஒரு லட்சம் வரையிலான தொகை மட்டுமே ஆட்டோ கிளைமில் எடுக்க முடியும் என்ற வசதி இருந்த நிலையில், தற்போது 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.