சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம்: கேரளா சட்டமன்றத்தில் கடும் அமளி
இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
Image Courtesy :ANI
திருவனந்தபுரம்,
சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் பதவி விலகக் கோரியும், தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மீது கேரள முதல்-மந்திரி அலுவலகம் அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டியும், கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF) உறுப்பினர்கள் பதாகைகள் மற்றும் கோஷங்களுடன் கேரள சட்டமன்றத்தின் மையப்பகுதிக்குள் இன்று நுழைந்தனர்.
முன்னதாக கேரள சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோது, இந்த விவகாரம் குறித்து முறையான ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து அமளியில் ஈடுபட்டனர். மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தைத் தொடர்ந்து கேரள சட்டமன்ற கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, சபரிமலை தங்கக் கடத்தில் விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இளைஞர் காங்கிரஸ் பேரணியாக செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேரணியாக சென்றவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் அவர்களை விரட்டினர்.