பனிமூட்ட காலங்களில் கிரிக்கெட் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்தலாம் - சசிதரூர் யோசனை
தென்னிந்தியாவில் காற்று மாசு பிரச்சினை இல்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார்.;
திருவனந்தபுரம்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதற்கிடையே, நேற்று லக்னோவில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற இருந்தது. ஆனால், போதிய வெளிச்சமின்மை மற்றும் அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக அந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடும் பனிமூட்டம் காரணமாக டி20 போட்டி ரத்துசெய்யப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் பனிமூட்டம் நிறைந்த காலங்களில் கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியாவில் நடத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் யோசனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
"டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் மூடுபனி இருப்பதால் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது என்பது சாத்தியமற்றதாகிவிடும். நான் சொல்வது மிகவும் எளிமையானது. இந்தக் காலகட்டத்தில், தென்னிந்தியாவில் போட்டிகளை திட்டமிடலாம். தென்னிந்தியாவிற்கு வந்து விளையாடலாம். அங்கு காற்று மாசு பிரச்னையும் இல்லை, பார்வைத் திறன் தொடர்பான பிரச்னையும் இல்லை. ரசிகர்களும் போட்டியை கண்டு மகிழலாம். போட்டிகளை பிசிசிஐ திட்டமிடுவதற்கு முன்பு வானிலை நிலவரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.