'மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியா விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை' - பிரதமர் மோடி

மாவோயிஸ்ட் சித்தாந்தம் பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க விடாமல் செய்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update:2025-11-01 18:33 IST

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சத்தீஷ்காரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ராஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு ரூ.14 ஆயிரத்து 260 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பிறகு அவர் பேசியதாவது;-

“சுமார் 50 ஆண்டுகளாக, நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஷ்கார் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர். அரசியலமைப்பை காட்டிக் கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், சுயநலத்திற்காக உங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர். மாவோயிஸ்ட் சித்தாந்தம் பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க விடாமல் செய்தது.

பல ஆண்டுகளாக பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. ஏற்கனவே இருந்தவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. மருத்துவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். நாட்டை ஆண்டவர்கள், தங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, ​​உங்களை கைவிட்டனர்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காக அழுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. 2014 ஆம் ஆண்டு, நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது, ​​இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டோம். இன்று அதன் விளைவுகளை இந்த நாடு காண்கிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியாவும், சத்தீஷ்காரும் முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நான் உறுதியளிக்கிறேன்.

கடந்த சில மாதங்களில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். 25 ஆண்டுகளாக நக்சல் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட போதிலும், சத்தீஷ்கார் தொடர்ந்து முன்னேறி வந்தது. இனி ​​நக்சல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்தவுடன், நமது வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்