போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை: உரிய ஆவணம் இல்லாத 30 பஸ்களுக்கு அபராதம்
புதுச்சேரி வழியாக வந்து செல்லும் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த 30 பஸ்கள் உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.;
புதுச்சேரி,
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி வழியாக வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உரிமம் இல்லாமல் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறைமலையடிகள் சாலையில் சுதேசிமில் அருகில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், தனியார் பஸ்கள், கார்களை சோதனை நடத்தினர். அப்போது 30 பஸ்களுக்கு உரிய ஆவணம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த 30 பஸ்களுக்கும் அபராதம் விதித்தனர். மேலும் பஸ்களுக்கு உரிய ஆவணங்களை போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
இதே போல் 2 கார்கள் வெள்ளை நிற போர்டு வைத்துக்கொண்டு வாடகைக்கு இயக்கப்பட்டது தெரியவந்தது. அந்த 2 கார்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.