சென்னை மோப்ப நாய் படைப்பிரிவில் புதிதாக 11 துப்பறியும் நாய் குட்டிகள் இணைப்பு

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 11 துப்பறியும் நாய்க்குட்டிகளுக்கு காவல் கூடுதல் ஆணையாளர் பெயர் சூட்டினார்.;

Update:2025-06-09 12:44 IST

சென்னை,

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், தலைமையின் கீழ், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) மேற்பார்வையில், காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு 1, கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு 2, புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு என இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் 16 துப்பறியும் மோப்ப நாய்களுடன் இயங்கி வருகிறது. அதில் 11 வெடிகுண்டு கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும் மூன்று குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும் இரண்டு போதை பொருள் கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும் நல்ல முறையில் பணிபுரிந்து வருகின்றன.

மேலும், புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவானது 7 துப்பறியும் மோப்ப நாய்களுடன் இயங்கி வருகிறது. அதில் நான்கு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்ப நாய்களும், மற்றும் மூன்று கொலை மற்றும் கொள்ளை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் துப்பறியும் மோப்பநாய்களுடன் நல்ல முறையில் பணிபுரிந்து வருகிறது. சென்னையில் துப்பறியும் மோப்ப நாய்களுக்கு டிரக்கிங் பயிற்சி அளிக்கப்பட்டு பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் துப்பறியும் மோப்ப நாய்களை பயன்படுத்தியதில் மிகவும் சாமர்த்தியமாக துப்பு துலக்கியும் மேலும் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு பணி, பள்ளி, கல்லூரி மற்றும் முக்கிய வியாபார தளங்கள் பேருந்து நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் இருந்து வரும் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகளில் துப்பறியும் மோப்ப நாய்கள் சிறப்பாக செயல்பட்டு காவல் துறையிலும் பொதுமக்களிடமும் மிகுந்த நன்மதிப்பை பெற்றுள்ளன.

மேலும் துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவை சிறப்பாக செயல்படவேண்டி வெடிகுண்டு, குற்ற வழக்குகள் மற்றும் போதை பொருள் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்படவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .ஆ.அருண் உத்தரவுபடி புதிதாக 11 துப்பறியும் நாய்க்குட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அதில் லேப்ரடார் இனத்தை சேர்ந்த இரண்டு மோப்ப நாய் குட்டிகளும், பெல்ஜியன் மாலினாய்ஸ் இனத்தை சேர்ந்த மூன்று மோப்ப நாய் குட்டிகளும், டாபர்மேன்இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் குட்டியும் என மொத்தம் 6 துப்பறியும் மோப்ப நாய் குட்டிகள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணிக்கும், மூன்று பெல்ஜியன் மாலினாய்ஸ் இனத்தை சேர்ந்த மோப்ப நாய் குட்டிகளும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த மோப்ப நாய் குட்டி என 4 துப்பறியும் மோப்ப நாய் குட்டிகள் போதை பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்கும், டாபர்மேன் இனத்தை சேர்ந்த 1 மோப்ப நாய் குட்டி குற்ற வழக்கை கண்டுபிடிக்கும் பணிக்கும் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி இன்று (09.06.2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள லாப்ரடோர், பெல்ஜியன் மாலினாய்ஸ், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த 3 மாதங்களான 11 நாய் குட்டிகளுக்கு (8 ஆண், 3 பெண்) வெற்றி, விக்ரம், நித்ரா, முகிலன், சிலம்பன், குரளி, காரி, குகன், வென்பா, தீரன், அலெக்ஸாண்டர் (Vetri, Vikram, Nithra, Mugilan,Silamban, Kurali, Kaari, Gugan, Venbha, Dheeran, Alexander) என்று பெயரிட்டு மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கினார். புதிய நாய் குட்டிகளுக்கு காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும்.

சென்னை பெருநகர காவல், மோப்ப நாய் படைபிரிவினர் கடந்த 2024 முதல் இதுவரை 3,657 அதி முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அலுவல்கள், 61 குற்ற வழக்குகளில் சம்பவ இடங்களுக்கு சென்று உரிய சோதனைகள் மேற்கொண்டு புலனாய்வுக்கு உதவி புரிந்து வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்தும், 137 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் மொத்தம் 3,855 நாசவேலை தடுப்பு சோதனை நிகழ்வுகளில் சீரிய முறையில் பணிபுரிந்துள்ளன.

இன்று (09.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் ஹரிகிரன் பிரசாத், (எஸ்டேட் மற்றும் நலன்), ராதாகிருஷ்ணன், (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்