பீகாரில் 100 வயதை தாண்டிய 14 ஆயிரம் வாக்காளர்கள்
இதேபோல 85 வயதை தாண்டிய வாக்காளர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 85 பேர் இருக்கின்றனர்.;
பாட்னா,
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. 7 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை ஆளப்போவது யார்? என்று தீர்மானிக்கப்போகிறார்கள்.
இந்த நிலையில், அந்த மாநிலத்தில் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு பிறகு, தேர்தல் கமிஷன் வெளியிட்ட தகவலின்படி, 100 வயதை தாண்டிய மூத்த குடிமக்கள் 14 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 85 வயதை தாண்டிய வாக்காளர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 85 பேர் இருக்கின்றனர். சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன் கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி பீகாரில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 16 லட்சத்து 7 ஆயிரத்து 527 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.