சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 43). இவர், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி தனது வீட்டின் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசசை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். அதில் மோசசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார். நேற்று நடந்த வழக்கில் மோசஸ் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.