‘ஏன் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்’ என கேட்டவர் மீது சமையல் தொழிலாளி கொடூர தாக்குதல்
தேவதானப்பட்டியில் ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் பழக்கடை வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்டார்.;
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 28). இவர், தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் பழக்கடை வைத்திருந்தார். இவருக்கு திருமணமாகி பாண்டிதேவி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர். மேலும் தற்போது பாண்டிதேவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சந்தனகுமார், தனது கடையின் அருகில் உள்ள ஓட்டலுக்கு தோசை வாங்க சென்றார். அந்த ஓட்டலில், சந்தனகுமார் வசிக்கும் அதே தெருவை சேர்ந்த சிவா (25) என்பவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சந்தனகுமார் வந்தபோது, சிவா தோசை கல்லில் கொத்து பரோட்டா போட்டு கொண்டிருந்தார்.
பரோட்டாவை கொத்து, கொத்தாக மாற்றுவதற்காக கல்லில் கூர்மையான தட்டுகளால் சிவா தட்டிக்கொண்டிருந்தார். இதனால் அதிக சத்தம் எழுந்தது. அங்கு நின்றிருந்த சந்தனகுமார், ‘ஏன் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்’ என்று சிவாவிடம் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த சந்தனகுமார் ஓட்டலில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சிவாவின் தலையில் தாக்கினார். அப்போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த சிவா, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தனகுமாரை சரமாரியாக குத்தினார். நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சந்தனகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சந்தனகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் விறகு கட்டையால் தாக்கியதில் காயமடைந்த சிவா, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.