ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்: கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.;
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் நல்லக்கண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்ற மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்று, இன்றைய தினம் ஐயா நல்லக்கண்ணு பெயரிலேயே அதை கட்டுவதற்கு, ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மின்தூக்கி மற்றும் படிக்கட்டு வசதிகளுடன், தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளன.
தரைத்தளத்தில் வரவேற்பு பதிவு, காத்திருப்பு அறை, அவசர நிலை மதிப்பீட்டு அறை, அவசர சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறையும், முதல் தளத்தில் சிறிய செயல்பாட்டு அரங்கம், மீட்சி பிரிவு, பணி மருத்துவர் அறை மற்றும் இரண்டாம் தளத்தில் மருத்துவ பயனாளிகளை தயார்படுத்தும் அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும் 8 மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடைந்துவிடும். இதுமட்டுமில்லாமல், பின்னால் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்கும் ஒரு பிணவறை கட்டிடம் (Mortuary Building) கட்டுவதற்கான அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) செல்வி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹ்மது மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.