அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு விழாவை காண்பதற்காக பல்வேறு வெளிநாட்டினரும் மதுரையில் முகாமிட்டு உள்ளனர்.;
மதுரை,
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெறுகிறது. இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு உள்ளன. அலங்காநல்லூரில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் மதுரை வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்-அமைச்சர் பங்கேற்று, வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படுவதையும், காளைகளை வீரர்கள் அடக்குவதையும் காண்பதற்காக பிரத்யேக மேடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் ஆகியோரும் வந்து இந்த விளையாட்டை ரசிப்பதற்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை காண்பதற்காக பல்வேறு வெளிநாட்டினரும் மதுரையில் முகாமிட்டு உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவையொட்டி 2 ஆயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.