திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
இதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122-வது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
"தமிழ்நாடு தலைகுனியாது - என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR) திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் BLO மற்றும் வாக்காளர்களுக்கு உதவிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
பரப்புரையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் தொடங்குகிறது. அடுத்த 30 நாட்களுக்கு மாநிலம் தழுவிய தீவிரமான பரப்புரையாக மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 10 வரை, பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்கள் 68,463-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளுக்குச் சென்று 2026 சட்டமன்ற தேர்தலில் அந்தந்த வாக்குச்சாவடி அளவில் வெற்றி பெறுவதற்கான உத்திகளை வகுக்க பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை எந்தவொரு கட்சியும் செய்யாத வகையில் 1900 மேற்பட்ட பகுதி/ஒன்றியம்/நகரம்/பேரூர் கழக செயலாளர்களுடன் - 78 கழக மாவட்ட செயலாளர்கள், 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட குழு உறுப்பினர்கள் குழுவானது 30 நாட்களில் 68,463 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக பார்வையிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 6.8 லட்சம் திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும், அணிதிரட்டவும் பரப்புரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் SIR பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து கொடுத்தார். இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து திமுக தலைமையில் சமர்ப்பித்தனர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.