முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ராமநாதபுரம் செல்கிறார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை(வியாழக்கிழமை) மாலை மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் திரளாக சென்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கார் மூலம் நாளை இரவு ராமநாதபுரம் வரும் மு.க.ஸ்டாலின் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நாளை இரவு தங்குகிறார். நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் அருகே பேராவூரில் நடைபெறும் அரசு விழாவில் அவர் கலந்து கொண்டு ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 54 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். முதல்-அமைச்சர் வருகையை ஒட்டி அவரை வரவேற்கும் வகையில் பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை வழிநெடுக திமுக கொடி கட்டப்பட்டுள்ளது.