இன்ஸ்டா பழக்கம்.. பேசுவதை தவிர்த்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பேசுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா வடமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் கலையரசன் (வயது 20). இவர் சென்னை ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்துபூந்தமல்லியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கலையரசனும், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள மேல்வாலை கிராமத்தை சேர்ந்த திருமணமான 29-வயது இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். பின்னர் நேரிலும் சந்தித்து பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களின் பழக்கம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதை அடுத்து கலையரசனுடன் அந்த பெண் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த கலையரசன் என்னுடன் பேசவில்லை என்றால் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
பின்னர் இது குறித்து அந்த பெண் கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கலையரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.