‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்

‘என் பள்ளி என் பெருமை’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.;

Update:2025-10-16 16:59 IST

சென்னை,

கல்வி வளர்ச்சி நாளைக் கொண்டாடும் விதமாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் தற்போது கல்வி பயிலும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபெறும் வகையில் “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம்(X), இன்ஸ்டாகிராம் (Instagram), முகநூல் (Facebook), வாட்ஸ்-அப் (WhatsApp), யூடியூப் (YouTube) வாயிலாகப் 10 வகையிலானப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் மொத்தம் 9,252 நபர்கள் கலந்துகொண்டனர், இதில் “என் பள்ளி என் பார்வையில்” என்ற போட்டியில் 7 நபர்களும், “நான் என் பள்ளியின் பேச்சாளன்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் பள்ளி என் கலை” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் அன்பான ஆசிரியை, ஆசான்” என்ற போட்டியில் (மாணவர்கள்) 7 நபர்களும், “என் கதை என் எழுத்தில்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் பள்ளி என் நினைவு” என்ற போட்டியில் 7 நபர்களும், “பள்ளிக்கூடம் வந்தேனே” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் அன்பான ஆசிரியை, ஆசான்” என்ற போட்டியில் (முன்னாள் மாணவர்கள்) 7 நபர்களும், கல்விக்கான தமிழ்நாடு அரசின் திட்டங்கள்” என்ற போட்டியில் 7 நபர்களும், “என் முன்னெடுப்புகள்” என்ற ரீல்ஸ் போட்டியில் 7 நபர்களும் என 70 நபர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும், இன்று (16-10-2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “என் பள்ளி! என் பெருமை!!” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே. ராஜாராம், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் இரா. சுதன், (ஓய்வு), பள்ளிக் கல்வித்துறை முனைவர். ச. கண்ணப்பன் கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரா. பாஸ்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்