டிட்வா புயல் மழை: சென்னையில் இன்று 103 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்

சென்னையில் நேற்று முதல் இன்று வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 13.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.;

Update:2025-12-03 15:07 IST

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடகிழக்குப் பருவமழை நடவடிக்கைகள் விவரம்:-

மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (3.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 546.05 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று 2.12.2025 காலை 5.30 மணி முதல் இன்று (3.12.2025) காலை 5.30 மணி வரை சராசரியாக 61.70 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 135.30 மி.மீட்டர் மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்), குறைந்தபட்சமாக முகலிவாக்கம் பகுதியில் 20 மி.மீட்டர் மழையும் (ஆலந்தூர் மண்டலம்) பெய்துள்ளது.

இன்று (3.12.2025) காலை 6 மணி முதல் 12 மணி வரை சராசரியாக 15.18 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் 108.60 மி.மீட்டர் மழைப்பொழிவும் (திருவொற்றியூர் மண்டலம்), குறைந்தபட்சமாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் 1.80 மி.மீட்டர் மழையும் (தேனாம்பேட்டை மண்டலம்) பெய்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 22.10.2025 முதல் 30.10.2025 வரை மொத்தம் 5,98,200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல் மழையின் காரணமாக 30.11.2025 முதல் நேற்று (2.12.2025) வரை 11,24,350 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இன்று (3.11.2025) 2,74,600 நபர்களுக்கு காலை உணவும், 3,51,300 நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், 17.10.2025 அன்று முதல் 2.12.2025 அன்று வரை 2,954 நிலையான மற்றும் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,20,998 நபர்கள் பயனடைந்துள்ளனர். இன்று (3.12.2025) 103 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 107 படகுகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 36 படகுகள் மாநகராட்சிக்கு சொந்தமாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையை (NDRF) சார்ந்த 300 நபர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையை (SDRF) சார்ந்த 50 நபர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 170 எண்ணிக்கையில் 100Hp மோட்டார் பம்புகள், 550 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட 1,496 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. 2 ஆம்பிபியன், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், பல்வகை பயன்பாட்டிற்கான 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் மர அறுவை இயந்திர வாகனங்கள் 15, ஹைட்ராலிக் ஏணி 2, கையடக்க மர அறுவை அறுப்பான் 224, டெலஸ்கோபிக் மர அறுவை இயந்திரங்கள் 216 என மொத்தம் 457 மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 29.11.2025 அன்று முதல் 3.12.2025 இன்று வரை மழையின் காரணமாக விழுந்த 64 மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர்த் தேக்கம் இன்றி போக்குவரத்து சீராக உள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், வண்டல் மண் சேகரிப்புத் தொட்டிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

24 மணிநேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிற்கு வரும் புகார்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புயல் மற்றும் மழையின் போது முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் ஆவின் பால் பவுடர் 1 லட்சம் பாக்கெட்டுகளும், 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் அடங்கிய தொகுப்பு 1 லட்சம் எண்ணிக்கையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்