ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு; மின் கம்பம் மீது பஸ் மோதியதால் பரபரப்பு
ஆக்கூர் அருகே சென்றபோது ஓட்டுநர் கணேசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையத்தில் இருந்து பொறையார் நோக்கி அரசு நகர பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஆக்கூர் அருகே சென்றபோது, ஓட்டுநர் கணேசனுக்கு எதிர்பாராத விதமாக திடீரென வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் தீவிரமாக முயன்று பஸ்சை ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார்.
அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி பஸ் நின்றது. இந்த சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 34 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். அதே சமயம் ஓட்டுநர் கணேசனுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.