த.வெ.க. திருச்செங்கோடு வேட்பாளர் இன்று அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு?
த.வெ.க.வில் கடந்த சில மாதங்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்றது.;
சென்னை,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 5 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழலில் அரசியல் களம் பரபரப்பு நிறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் இந்த முறை மற்றும் த.வெ.க.வும் களம் காண்கிறது. இதனால் 4 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. ஆட்சியில் பங்கு என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்து இருக்கிறார். இதனால், ஆட்சியமைக்கும் பட்சத்தில், அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கூட்டணி அமைப்பதற்கான முயற்சியையும் த.வெ.க. தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. த.வெ.க. அணியில் அ.ம.மு.க., புதிய தமிழகம் இணைந்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தே.மு.தி.க., பா.ம.க. (அன்புமணி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார் என தகவல் வெளியானது.
இதற்கேற்ப, த.வெ.க.வில் கடந்த சில மாதங்களாக வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. இந்த சூழலில், சில தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. திருச்செங்கோட்டில் இன்று வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதன்படி, அருண்ராஜ் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.