‘ஆளுங்கட்சியை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும்’ - தமிழிசை சவுந்தரராஜன்
தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.;
சென்னை,
ஆளுங்கட்சியை தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;-
“கருத்து வேறுபாடு உள்ள தலைவர்கள் ஒன்றாக இணையும்போது சலசலப்பு ஏற்படுவதும், அது தலைப்புச் செய்தியாக மாறுவதும் இயல்புதான். ஆனால் அந்த சலசலப்பு ஆளுங்கட்சியை உடைக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சி கூட்டணியை உடைத்துவிடக் கூடாது.
தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. செங்கோட்டையனுக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும், தினகரனுக்கும், சீமானுக்கு, விஜய்க்கும் அந்த கடமை இருக்கிறது. இந்த கடமையை அவர்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம்.
எதிர்கட்சிகள் ஒன்றாக கூட்டணியில் இணையும்போது வாக்குகள் பிரியாமல் இருக்கும். வாக்குகள் பிரிந்துவிட்டால், நாம் யாரை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை தவறவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைவது நல்லது. தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ஆளுங்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் எல்லோரும் இணைய வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.