செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கல்லூரி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த கிருஷ்ணவேணி செல்போனை மட்டுமே பார்த்து கொண்டிருந்துள்ளார்.;
கோப்புப்படம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல்வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சடையன் மகள் கிருஷ்ணவேணி (18 வயது). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயோ டெக்னாலஜி பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி கிருஷ்ணவேணி, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
வீட்டிற்கு வந்த பிறகு, கிருஷ்ணவேணி செல்போனை மட்டுமே பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த சடையன் கிருஷ்ணவேணியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை மேலும் மோசமானதால் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் வீட்டிற்கு வரும் வழியிலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.