ஹூப்பள்ளி-கொல்லம் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தசரா, சபரிமலை யாத்திரையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உப்பள்ளி-கொல்லம் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07313) வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 28-ந்தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹூப்பள்ளியில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்-எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி சிறப்பு ரெயில் (07314) வருகிற 29-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 29-ந்தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மட்டும் கொல்லத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6 மணிக்கு ஹூப்பள்ளியை சென்றடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் ஹாவேரி, தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, எஸ்.எம்.வி.டி. பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆல்வா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனச்சேரி, திருவள்ளா, செங்கனூர், மாவளிகரா, காயன்குளம், கருநாகபள்ளி, சாஸ்தான்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.