காரைக்கால் - பேரளம் புதிய அகல ரெயில் பாதையில் நாளை மறுநாள் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்
நாளை மறுநாள் நடைபெறும் அதிவேக ரெயில் சோதனை ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார்.;
கோப்புப்படம்
காரைக்கால் - பேரளம் இடையே உள்ள 23 கி.மீ. தொலைவுக்கு 1898-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. 87 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இந்த தண்டவாளத்தில் இயக்கப்பட்ட ரெயில்கள் மூலம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வந்தனர். மேலும், ஐஸ், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்லவும் ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. என்றாலும், போதிய வருவாய் இல்லை என்று கூறி 1987-ம் ஆண்டு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
கடந்த 24 ஆண்டுகளாக இப்பகுதிக்கு இடையே ரெயில் போக்குவரத்து இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு நாகூர் - காரைக்கால் இடையே 10.5 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு, ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் பாதையை பேரளம் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருநள்ளாறு வரும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, காரைக்கால் - பேரளம் இடையே 23 கி.மீ. தொலைவுக்கு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 8 பெட்டிகள் கொண்ட ரெயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இந்தப் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (24-ந் தேதி) மீண்டும் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இந்த சோதனை ஓட்டத்தின்போது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ய இருக்கிறார். இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மய அகல ரெயில் பாதையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 24-5-2025 அன்று (நாளை மறுநாள்) நடைபெற இருக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த சோதனை ஓட்டத்தின்போது ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்ய இருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தில் இந்த ரெயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.