இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரெயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது - சு.வெங்கடேசன்
தெற்கு ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தெற்கு ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம். ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்ட மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.