தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி வெளியீடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.;
சென்னை,
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது. அதேபோல், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி முடிந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும் பணி நடந்தது. அதுவும் தற்போது நிறைவடைந்தது.
இதனையடுத்து தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அப்படி இல்லையென்றால், ஏற்கனவே தெரிவித்து இருந்த தேதியில்தான் தேர்வு முடிவு வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிபடுத்தி உள்ளார். பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியான நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாக உள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசுத்தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிட உள்ளார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.