குமரி அனந்தன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்

குமரி அனந்தனுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.;

Update:2025-04-09 10:22 IST

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த குமரி அனந்தனுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசையின் தந்தையாருமாகிய, குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.

தலைசிறந்த தேசியவாதியான குமரி அனந்தன் மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் அன்பைப் பெற்றவருமான குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்ட சிறந்த தலைவர்களில் குமரி அனந்தனும் ஒருவர். வாழ்நாள் முழுவதும் மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் தமிழில் வினா எழுப்பும் உரிமையைப் பெற்றுத் தந்தவர். அஞ்சல் துறை படிவங்களை தமிழில் வெளியிட வேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் போராடியவர்.

என் மீதும், பாட்டாளி மக்கள் கட்சி மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மதுவுக்கு எதிரான போராட்டங்களில் குமரி அனந்தன் கலந்து கொண்டுள்ளார். அன்னைத் தமிழைக் காப்பதற்காக பாமக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கியவர் அவர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குமரி அனந்தன் முழுமையாக நலமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், ஆகச் சிறந்த தமிழ்ப் பற்றாளரான குமரி அனந்தனை இயற்கை நம்மிடமிருந்து பிரித்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;

தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், பெருந்தலைவர் காமராசரின் சீடருமான இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் உடல்நலக்குறைவால் காலமானர் என்பதையறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தேசப்பற்று மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரான குமரி அனந்தன், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். காமராசர் காலத்தில் இளைஞர் காங்கிரசின் மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வளர்த்தார். காமராசரின் அன்பைப் பெற்று அவரது சீடராக மாறிய குமரி அனந்தன், காமராசரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1977-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

என் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டிருந்தவர். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பது தான் அவரது உயர்ந்த நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அதை பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். அண்மையில் கூட, உடல் நலிவடைந்த நிலையிலும் என்னுடன் தொலைபேசியில் பேசிய குமரி அனந்தன், தமிழ்நாட்டில் எப்படியாவது மதுவை ஒழித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவரது மறைவு மது ஒழிப்பு முயற்சிக்கு பேரிழப்பாகும்.

குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது மகள் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது.:-

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை நிதானமாகவும், நம்பிக்கையுடனும் வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய குமரி ஆனந்தன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.

குமரி ஆனந்தன் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். அவருடைய அரசியல் பயணம், சமூக நலனுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள், தமிழ் மக்கள் நலனுக்காக அவர் செலுத்திய பணி, இந்நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்பு நினைவிற்குரியது. அவரது தூய்மை, நேர்மை மற்றும் தலைமைத் தன்மை இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

'இலக்கியச் செல்வர்' என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கியவர். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 29 நூல்களை எழுதி உள்ளார்.

குமரி ஆனந்தன் மறைவு தமிழ் நாட்டுக்கும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். குமரி ஆனந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்