பேச்சுவார்த்தை தோல்வி: 4-வது நாளாக தொடரும் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம்

சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.;

Update:2025-10-12 08:17 IST

சென்னை,

சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளின் 2025-2030-ம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவை என ஆயில் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக்கோரி தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆயில் நிறுவன அதிகாரிகள் நேற்று காணொலி காட்சி மூலமாக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் 3 ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை ஆயில் நிறுவன அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எங்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடருகிறது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் உடன்பாடு எட்டப்பட்டால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்