காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
யோகேஷ் தனது வீட்டுக்கு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.;
திருப்பூர் பாளையக்காடு 2-வது வீதியை சேர்ந்தவர் பாண்டியன். அவருடைய மகன் யோகேஷ் (19 வயது). இவர், பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், தனது வீட்டுக்கு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. இதற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த யோகேஷ் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு எஸ்.ஆர்.சி. மில் மேம்பால பகுதிக்கு சென்றார். பாலத்தின் மீது ஏறிய அவர் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கீழே குதித்தார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து குதித்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.