வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம்: நர்சிங் மாணவியை அடித்துக்கொன்ற காதலன் - அதிர்ச்சி சம்பவம்

வேறு வாலிபரிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த காதலன் நர்சிங் மாணவியை கல்லால் அடித்து படுகொலை செய்தார்.;

Update:2025-09-29 03:47 IST

கோப்புப்படம் 

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (19 வயது). பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருடைய தாய்மாமன் மகள் சிவகாசியை சேர்ந்த பிரதீபா (17 வயது). இவர் அங்குள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் சமீப காலமாக இவர் கல்லூரிக்கு செல்லவில்லையாம். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஜெயசூர்யா வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்ததால் அவருடன் பேசுவதை பிரதீபா நிறுத்தியதாக தெரிகிறது. மேலும் வேறு ஒருவருடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, அவரிடம் போனில் வாக்குவாதம் செய்து திட்டியுள்ளார். இந்த நிலையில் வேறொருவருடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று பிரதீபாவை அழகர்கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி ஜெயசூர்யா, ராஜாக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வேறு யாருடனும் பேசக்கூடாது என பிரதீபாவிடம், ஜெயசூர்யா பிரச்சினை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயசூர்யா கீழே கிடந்த கல்லால் பிரதீபாவை அடித்து படுகொலை செய்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஜெயசூர்யா ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்